அம்மா என்பவள் காத்திருப்பவள்
செல்மா பிரியதர்ஸன்
நினைவுகள் எல்லாம்
சரியாக இருக்கும் பட்சத்தில்
அம்மா என்பவள்
மெலிந்த தேகமும்
கந்தலான உடையும் அணிந்தவள்
சமையல் பாத்திரங்களுக்கு முன்பு
வியர்வை துடைப்பவள்
நெருப்பை சீராக வளரவிடுபவள்
அழுக்குத் துணிகளை அள்ளிக்கொண்டுபோய்
ஆற்றிலே அலசுபவள்
அவை உலரும் நேரத்தில்
கரையோரக் காடுகளில் நட்ட
யூகாலிப்டஸ் கன்றுகளுக்கு
நீர் வார்ப்பவள்
நினைவுகள் எல்லாம்
சரியாக இருக்கும் பட்சத்தில்
அம்மா என்பவள்
வயலில் விளைந்த காய்கறிகளை
கூடைகளில் அள்ளிப்போய்
வீதிகளில் விற்பவள்
மீந்தவற்றை உப்புச் சேர்த்து உலரவைப்பவள்
நள்ளிரவு வரை
பொட்டல்களில் அறுத்த
உளுந்தம் பயிறுகளை
திருவைகளில் வைத்துத் திரிப்பவள்
அம்மா என்பவள்
குழந்தைகளை உறங்கவைத்துக்
கணவனுக்குக் காத்திருப்பவள்
மூன்றாம் ஜாமத்தில்
பணிவிடைகள் போல் சிலவற்றை
தன் கணவனுக்குச் செய்ததை
பிள்ளைகள் அறிந்தபின்னும்
வெட்கமற்ற அதிகாலையில்
ஊறவைத்த தானியங்களின் மேல்
உலக்கை குத்துபவள்
நினைவுகள் எல்லாம்
சரியாக இருக்கும் பட்சத்தில்
வறுத்த கம்பு மாவரைத்து
உலர்ந்த ஈசல்களில் கருப்பட்டி தூவி
கலந்து தருபவள்
உமிகள் கட்டிய துணியை
சூடாக்கி ஒத்தடம் தருபவள்
அம்மா என்பவள்
பணியாரம் சுட்டவள்
வடித்த சுடு கஞ்சியில்
தனது கணவனது வேட்டியை
முக்கி எடுப்பவள்
பொதுவில் அழியவிட்ட
குளத்து மீன்களை உளசுபவள்
சேவற்கட்டில் ஜெயித்த சேவல்களின் இறகுகளை
வெண்ணீரில் கொய்து
குழம்பு சமைப்பவள்
தின்னிக் கோழி முட்டைகளை
அடை வைப்பவள்
தன் மகள் ருதுவான நாட்களில்
கால்களை கட்டிக்கொண்டு அழுதவள்
நினைவுகள் எல்லாம் சரியாக இருக்கும் பட்சத்தில்
எனக்குத் தெரியாததெல்லாம்
மாதா கோயில் மணியோசைக்கு
தனது சமையற்கட்டில் முக்காடிட்டு
ஏன் கண்ணீர் சொரிந்தாள் என்பதும்
ரசத்திற்கரைத்த அம்மியில்
ஏன் அரளிவிதைகளைத் தட்டினாள் என்பதும்.
பிறகு என் சந்தேகமெல்லாம்
கஞ்சியிலிட்ட விறைத்த ஆடைகள்
பொதுவில் அழியவிட்ட மீன்கள்
மற்றும் அந்த யூக்லிப்டஸ் மரங்களின் மீதும்தான்.
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|